Home பள்ளிவாசல் மண்ணின் குரல்: சுல்தான் சிகந்தர் பாதுஷா ஷஹீத் வலியுல்லாஹ் தர்கா – திருப்பரங்குன்றம்

மண்ணின் குரல்: சுல்தான் சிகந்தர் பாதுஷா ஷஹீத் வலியுல்லாஹ் தர்கா – திருப்பரங்குன்றம்

by admin
0 comment
மதுரை மாவட்டத்தின் திருப்பரங்குன்றம் குன்றின் மேல் இஸ்லாமிய மக்கள் வந்து வழிபட்டுச் செல்லும் ஒரு தர்கா ஒன்று இருக்கின்றது. 
 
தென்பரங்குன்றம் ஸ்ரீ காசிவிசுவநாதர் கோயிலுக்குச் செல்வதற்கு அமைக்கப்பட்டுள்ள படிகளில் ஏறிச் செல்லும் போது மேற்பக்கத்தில் மலைப்பகுதியில் வலது பக்கத்தில் மற்றுமொரு பாதை விரிவதைக் காணலாம். அந்த விரிந்து செல்லும் பாதையில் தொடர்ந்து சென்றால் அங்கே சமமான ஒரு தரைப்பகுதி இருப்பதையும், அதன் அருகிலேயே ஒரு சுனை ஒன்று நீருடன் காட்சி அளிப்பதையும் காணலாம். அங்கிருந்து வடக்கு நோக்கிப் பார்த்தால் இரண்டு சமாதிகள் எழுப்பப்பட்டிருப்பதைக் காணலாம்.

dav

Picture 2 of 6

 
இந்தச் சமாதி இருக்கும் இடத்திலிருந்து மேலே செல்வதற்கென்று கற்படிகளோ அல்லது வாகனம் செல்லும் சாலையோ இல்லை. ஆனால் மரங்கள் நிறைந்த அப்பகுதியில் மேலே மனிதர்கள் செல்லும் ஒற்றையடிப்பாதை ஒன்று இருப்பதைக் காண முடியும். அந்த ஒற்றையடிப்பாதையில் ஏறி படிப்படியாக ஏறக்குறைய பதினைந்து நிமிடங்கள் நடந்தால் மேலே இருக்கின்ற தர்காவைக் காணமுடியும்.
 
நான் சென்றது மதிய நேரம். மேலே நான் வந்து சேர்ந்த போது மணி ஏறக்குறைய முற்பகல் பன்னிரண்டு இருக்கும். நான் உள்ளே நுழையும் போது குடும்பங்களாக ஆணும் பெண்ணுமாக இஸ்லாமிய மக்கள் வழிபாடு முடித்து வந்து கொண்டும் தர்காவிற்குள் சென்று கொண்டும் இருந்தனர். வாசலில் சில வயதான பெரியோர் அமர்ந்திருந்தனர். அதில் ஒருவர் தன் பக்கத்தில் மயிலிறகு கட்டு ஒன்றினையும் வைத்திருந்தார். தர்காவிற்கு வருபவர்களுக்கு மந்திரித்து அவர்களுக்குப் புனித நீரைக் கொடுப்பது மற்றும் மயிலிறகுக் கட்டினால் அவர்களின் தலையின் மேல் வைத்து எடுத்து  ஓதிப் பிரார்த்திப்பது என்பது போன்ற சடங்குகளைச் செய்பவர் இவர். 
 
 சுல்தான் சிகந்தர் பாதுஷா ஷஹீத் வலியுல்லாஹ் தர்கா என்பது இந்த தர்காவின்  பெயர். இஸ்லாமிய மார்க்கத்தைப் பரப்புவதற்காக ஏறக்குறை எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் அரேபிய நாட்டிலிருந்து இப்பகுதிக்கு வந்து பின் இங்கே வாழ்ந்து மறைந்தவர் பெயரில் தான் இந்தத் தர்கா வழங்கப்படுகின்றது. அப்போது மதுரையைப் பாண்டிய மன்னர்கள் ஆண்டுகொண்டிருந்த காலம். மன்னருக்கும் ஏனையோருக்கும் நோய் ஏற்படும் போதும், உடல் உபாதைகள் ஏற்படும் போதும் மருத்துவ உதவிகளை குரான் ஓதுதல், மூலிகை மருத்துவம் என்ற வகையில் செய்து பிணி தீர்க்க இங்கு வாழ்ந்த இஸ்லாமிய குருமார்கள் உதவியிருக்கின்றனர். இதன் அடிப்படையில் இந்த குருமார்களுக்குப் பாண்டிய மன்னர்கள் ஆட்சியில் அருகாமையில் இருந்த கிராமங்களில் வாழ்வதற்கான இடங்கள் வழங்கப்பட்டன. சுல்தான், மற்றும் அவருடன் வந்த மந்திரிகள், மத குருமார்கள், மந்திரியாக இருந்து வைத்திய சாத்திரம் படித்த இஸ்லாமிய மருத்துவர் ஆகியோர் சமாதிகள் இந்தப் பகுதியில் இருக்கின்றன. இங்குள்ள ஐதீகத்தின் படி, இந்தச் சுல்தான் தன் வயோதிக வயதில் இந்தக் குன்று இருக்கும் பகுதியில் மறைந்தார் என நம்புகின்றனர்.
 
சுல்தான் சிகந்தர் பாதுஷா ஷஹீத் வலியுல்லாஹ் அவர்களின் சமாதி இந்தத் தர்காவின் உட்புறத்தில் அமைந்துள்ளது. இரண்டு பெரிய பாறைகளுக்கு இடையில் பின்புறமாக இந்தச் சமாதி எழுப்பப்பட்டுள்ளது. குடைவரை கோயில் போன்ற அமைப்பு உள்ளே இருக்கின்றது. அந்தச் சமாதியின் மேல் பக்கம் பச்சை நிறத்திலான துணி போர்த்தப்பட்டுள்ளது. இந்தச் சமாதிக்கு முன் புறத்தில் மேலும் ஒரு சமாதி ஒன்றும் உள்ளது. இது சுல்தானுடன் வந்த மந்திரியின் சமாதி. இந்தச் சமாதிக்கு முன்னர் மிக வித்தியாசமான தோற்றத்தில் அமைந்த வெண்கல குத்து விளக்குகளை வரிசையாக வைத்திருக்கின்றனர். இந்தச் சமாதி பிரத்தியேகமாக ஒரு இரும்புக் கம்பி போட்டு பாதுகாக்கப் படுகின்றது. சுல்தான் மட்டுமல்லாது இந்த மந்திரியும் மருத்துவத்தில் திறமை பெற்றவராக இருந்திருக்கின்றார். அவர்கள் வந்து சேர்ந்த இப்பகுதியில், காடுகளில் கிடைத்த மூலிகைகளைக் கொண்டு நோய்வாய்ப்பட்டு வாடும் மக்களுக்கு உதவும் சேவையை இவர்கள் செய்திருக்கின்றனர். இந்த மந்திரியின் பெயர் லுக்மான் ஹகீம் என்பது. 
 
 
 
விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.de/2017/03/blog-post_26.html
யூடியூபில் காண:      https://www.youtube.com/watch?v=zzUknnJFI6s&feature=youtu.be
 
 
 
 
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

You may also like

Leave a Comment